Wednesday 6 May 2009

என் சிந்தனைத் துளிகள் 1

வித்தியாசங்கள்


நீங்கள் எப்பவுமே உங்களை ஒரு தனித்துவமானவராக நினைத்ததுண்டா? உங்கள் எண்ணம் ,அறிவு ,ஆற்றல் ,சம்பிரதாயங்கள ,சாதி ,மதம், தோலின் நிறம் ,பேசும் மொழி ,ஏழை பணக்காரன் ,எந்த நாட்டுக்காறன்............. என்று எம்மிடையே ஆர்ப்பரிக்கும் வித்தியாசங்கள் எண்ணுக்கடங்காதவை  என்று உணர்ந்ததுண்டா? இல்லவே இல்லை என்று பொய் சொல்லாதீர்கள்?

ஆனால் உன்னித்துப் பார்க்கையில் எம்மிடையே உள்ள ஒற்றுமையான குணங்கள் எத்தனை! எத்தனை! சிங்களவனோ தமிழனோ,அமெரிக்கனோ இந்தியனோ ,இந்துவோ கிறிஸ்தவனோ , ஏழையோ பணக்காரனோ ........நாம் அனைவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நேசிக்கிறோம்,பிறர் எங்களை நேசிக்க வேண்டுமென்று ஏங்குகிறோம்,இன்பத்தையும் அமைதியையும் எப்பவுமே விரும்புகிறோம் ,பயப்பிடுகிறோம்,எமக்குப் பாதுகாப்பை வேண்டுகிறோம், சாப்பிடுகிறோம் ......
இப்படி எமக்குள் உள்ள ஒற்றுமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எமக்கிடையே உள்ள வேறுபாடுகள் எங்கள் மனதில் விஸ்வரூப மெடுத்து  எங்களுக்குள்ள இந்தப் பாரிய அடிப்படை ஒற்றுமைகளை மங்க வைத்து விட்டன .

நீங்கள் ஒருவரை மனதாரக் காதலிக்கும்போது,அவர் இந்துவோ,இந்தியனோ, கறுப்பனோ,குள்ளனோ...என்ற எண்ணங்கள் இல்லாமல் போவது உண்மையல்லவா? இதனால்தானே காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். என் இளவயதில் ஒரு அபூர்வத் தம்பதிகளை நான் சந்தித்திருக்கிறேன். .என் பாடசாலைக்கருகில் குடியிருந்தார்கள்.பார்த்தவர்களைத் திரும்பிப்  பார்க்கவைக்கும் அழகுள்ள பெண்மணி அவள்.  கணவர் குள்ளச் சாதி, பறங்கி. அவரது உயரம் அவள் இடுப்பளவுதான். அவர்கள் தினம் கைகோர்த்துச் செல்வதைக் கண்டு நான் இதுதான் காதலா! என வியந்திருக்கிறேன். ஒருவரையொருவர் ஆழமாக அன்பு செய்து ,அவர்கள் நலனில் அக்கறை கொள்ளும்போது, எம் கண்ணுக்கு வேறுபாடுகள் மறைந்து  ,எமது நம்பிக் கைகள்  நகர்ந்து , ஒற்றுமைகள் பெரிதாவதுதான்  காரணம்.
துரதிஸ்டவசமாக எமக்கு எம் நம்பிக்கைகளைக் களைந்தெறிவதும் ,ஆழமாக அன்பு செய்வதும் மிகக் கடினமான விடயமாகி விட்டது . வேற்றுமைகள் மேலோங்கி ஒருவ்ரை ஒருவர் கொன்று குவிக்கும் கும்பலுக்கிடையே  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . எங்கள் நம்பிக்கைதான் எங்கள் எதிரி . எங்களின் சாபக்கேடு. 

எப்போ எங்கள் மூட நம்பிக்கைகளை நாங்கள் முற்றாக மறந்து  விடுகிறோமோ , எப்போ மற்றவனை எம்மைப்போல் நேசிக்கிறோமோ, அப்போதான் எமக்கு விடிவு. இது எப்போ சாத்தியமோ,  அப்போதான் எமது ஒற்றுமைகளையும் ,    உண்மைகளையும் நாம் முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.



3 comments:

  1. உங்கள் சிந்தனைத்துளிகள் அழகு
    எழுத்து நடையும் அருமை
    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆதரவிற்கு நன்றி புதியவன்

    ReplyDelete
  3. thamilanin sirappu ithuthan

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!