Friday 5 June 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி-பகுதி 4

நாங்கள் நினைப்பது ஒன்று. ஆனால் இறைவன் வகுப்பது பிறிதொன்று என்பார்களே! ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்டு அப்பா பக்கத்திலேயே இருக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். விதி என்னை உந்தித் தள்ளிய வேகத்தில் நான் இங்கிலாந்தில் வந்து விழுந்தேன். எனக்கு நினைவிருக்கிறது. நான் கடைசியாக அவரிடம் விடை பெற்றபோது ' நீயும் போறியா ..? என்று கதறியபடி அவர் என்னைக் கட்டி அழுதது.....இப்போ இன்னும் என்னை அழ வைக்கிறது.அப்போ அதுதான் எங்கள் கடைசிச் சந்திப்பு என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.

இங்கு வந்ததும் அப்பாவை என்னுடன் அழைக்கும் நோக்கத்துடன் முழு மூச்சாக உழைக்கத் தொடங்கினேன். அப்போ என் தம்பிமார் அம்மாவை தங்களுடன் அழைத்துக் கொண்டார்கள். இரண்டு வருடங்களில் அப்பாவை கடவுச் சீட்டு எடுக்கும் படியும் அவரை இங்கு வருவதற்கு ஆயத்தப் படுத்தும் படியும் கடிதம் எழுதினேன். பதில் வர சற்றுத் தாமதமானது. ஆனால் அவர் பதிலில் கடவுச் சீட்டு எடுத்து விட்டதாகவும் ,ஆனால் வேறொரு நாட்டுக்குப் போக தனக்கு வீசா கிடைத்து விட்டதால் லண்டன் வர முடியாதெனவும் எழுதியிருந்தார். சற்றுக் குழம்பிப் போனாலும் அவர் குடியில் எழுதியிருப்பார் என்ற நினைவில் அதை நான் பெரிது படுத்தவில்லை.

எதிர்பாராத விதத்தில் அப்பா மிகக் கடுமையான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியை என் நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதன்பின்னர் தான் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஈரலில் செரோசிஸ் என்று டாக்டர்கள் உறுதிப் படுத்திய விடயம் எனக்குத் தெரிய வந்தது. செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றேன். என் குடும்பத்தார் அனைவரும் அகதி விசாவில் இருந்ததினால் எவரும் நாடு திரும்பும் நிலையில் இருக்க வில்லை. அப்பாவின் சகோதரர்களும் அவர் பெற்றோரும் அவரைக் கவனித்தார்கள். அவர்களுடன் மட்டும் தான் என்னால் கதைக்க முடிந்தது. கடைசி மட்டும் அப்பாவோடு கதைக்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கல்லாகச் சமைந்து போனேன். கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தேன்.

என் தங்கை பல சிரமங்கள் பட்டு ஊர் திரும்பினாள். ஆனால் அவள் போய் இறங்கும் முன்னே அவர் அவசரப் பட்டு இறைவனடி போய் விட்டார். உண்மையைச் சொன்னால் அவர் இறந்த சேதி கேட்ட பின்பு நான் அழுவதை நிறுத்தி விட்டேன். மனதில் ஏதோ அவர் வேதனைகளில் இருந்து அவருக்கு நிரந்தர விடுதலை கிடைத்து விட்டது என்ற நிம்மதி என்று கூடச் சொல்லலாம்.
அவர் ஜம்பத்தி ஆறு வயதில் எங்களை விட்டுப் போவார் என்று நான் நினைக்கவில்லை. அப்பா பரம்பரையில் எவரும் எண்பது வயதுக்கு முன்பு போனதில்லை. அதுக்கும் மேலாக ,இரண்டு வாரத்தில் நான் வெளிநாடு போகப் போகிறேன் என்று சரியாகச் சொன்ன சாஸ்திரி ,அப்பா எண்பது வயது வரை இருப்பார் என்று சொன்னதை நான் தேவ வாக்காய் நம்பி விட்டேன்.

வருடங்கள் ஓடிவிட்டாலும் ,இப்போ என் நட்புள்ள குணத்தில், என் குழந்தைகளின் கபடமற்ற சிரிப்பில், என் தம்பியின் மிடுக்கான நடையில், தள்ளாடி வரும் முதியவர் உருவில் ....இப்படிப் பல பல வடிவங்களில் தினம் தினம் நான் அப்பாவைப் பார்க்கிறேன். அவர் எங்கும் போய் விடவில்லை. வெவ்வேறு வடிவில் என்னைச் சுற்றித்தான் இருக்கிறார். ஆனாலும் அவரது சில வார்த்தைகளைக் கேட்கவோ , அவரது அமுக்கமான சிரிப்பினை , அந்தக் கூர்மையான கண்களை இனிமேல் நான் காணவோ முடியாதென்று நினைக்கும் போது இப்போ கூட கண்கலங்கி நெஞ்சம் கனக்கத்தான் செய்கிறது.

.

12 comments:

  1. உண்மையில் நெஞ்சம் கனக்கச் செய்யும் நினைவுகள் தான் தமிழச்சி...

    ReplyDelete
  2. வருடங்கள் ஓடிவிட்டாலும் ,இப்போ என் நட்புள்ள குணத்தில், என் குழந்தைகளின் கபடமற்ற சிரிப்பில்,

    ReplyDelete
  3. வாங்க புதியவன். உங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  4. வாங்க Kavi Kilavan,முதல் வருகைக்கு நன்றி. என்ன சொல்ல நினைத்தீர்கள் என்று தெரியவில்லை.கருத்து முழுதாகப பதிவாகவில்லை.

    ReplyDelete
  5. கந்தர்மடத்திலிருந்து கவின்9 June 2009 at 18:31

    வாழ்த்துக்கள்...தமிழிச்சி......!
    யாழ்ப்பாணத்து தமிழ் நடையே தனி சுகம்.
    இன்னும் எழுதுங்க...எங்கட தமிழிலேயே எழுதுங்க.

    ReplyDelete
  6. தமிழ்!!
    அப்பாவைப் பற்றி கண்கலங்குமளவுக்கு எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
  7. கவின், உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் என் நன்றி.

    ReplyDelete
  8. தேவா, உங்கள் நெகிழ்வான கருத்துகளுக்கு என் நன்றி.

    ReplyDelete
  9. நெகிழ்வான பதிவு. மேற்கூற ஏதும் இல்லை.

    ReplyDelete
  10. வாங்க வசந்த், கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!